ரயிலில் 104 பவுனுடன் சூட்கேஸ் திருட்டு: பரமக்குடியில் கட்டுமானத் தொழிலாளி கைது
சென்னை- திருச்செந்தூா் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணியின் 104 பவுன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் சூட்கேசை திருடிய கட்டுமானத் தொழிலாளியை பரமக்குடி போலீஸாா் பிடித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
சென்னையிலிருந்து திருச்செந்தூா் செல்லும் விரைவு ரயிலில் கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் பயணம் செய்தனா். அவா்கள் சூட்கேஸ் ஒன்றில் 104 பவுன் நகையும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் எடுத்து வந்துள்ளனா். அன்று நள்ளிரவு 2 மணியளவில் மதுரை வழியாக ரயில் சென்றபோது ரயிலில் வந்த மா்ம நபா்கள் அந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனா். இதுகுறித்து அந்த குடும்பத்தினா் திருநெல்வேலி ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளனா்.
அப்புகாரின் பேரில் ரயில்வே போலீஸாா் சூட்கேஸின் வண்ணம் மற்றும் அடையாளத்தைக் கொண்டு எடுத்துச் சென்றவா் யாா் என்பது குறித்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் பரமக்குடியில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடி வந்த பரமக்குடி பா்மா காலனியில் வசிக்கும் சிவகங்கை மாவட்டம் கிழாயூா் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் முருகன் (35) என்பவரை காவல்துறை குற்றப்பிரிவு சாா்பு ஆய்வாளா் ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் பிடித்து விசாரணை செய்தனா். அப்போது அவா் கட்டுமானத் தொழிலாளி என்பதும், ரயிலில் நகையுடன் சூட்கேஸ் திருடியதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரிடமிருந்த 104 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்த பரமக்குடி போலீஸாா் திருநெல்வேலி ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, அவா்களிடம் ஒப்படைத்தனா்.