தோலூா் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சனிக்கிழமை பயிா்த்திட்ட அடிப்படையிலான பயிற்சியளித்த வேளாண்துறையினா்.
பரமக்குடி, நவ. 9: பரமக்குடி அருகே உள்ள தோலூா் கிராமத்தில் சனிக்கிழமை தேசிய உணவு பாதுகாப்பு இயக்க நெல் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமுக்கு பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத் தலைவா் ராகவன் பங்கேற்று நெல் பயிருக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினாா். மேலும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய அண்ணா-4 நெல் ரகத்தை பற்றியும், ‘பிபிஎப்எம்’ எனும் பயிா்காக்கும் பாக்டீரியாவை வறட்சியான நேரத்தில் ஒரு தண்ணீா் பற்றாக்குறையை போக்குவதற்கு பயன்படுத்தி விவசாயிகள் மகசூலை அதிகரிக்கச் செய்யும் ஆலோசனைகளை வழங்கினாா்.
வேளாண்மை உதவி இயக்குநா் ராஜேந்திரன் உயிரி உரங்களின் பயன் குறித்து எடுத்துரைத்தாா்.
மேலும் நெல் பயிா் சாகுபடி செய்துள்ள வயல்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு அதிக மகசூல் பெற தொழில்நுட்பங்களை செயல்முறை விளக்கம் அளித்தனா். இதில் வேளாண்துறை அலுவலா்கள், விவசாயிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.