ராமநாதபுரத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்துக்கான மண் தர ஆய்வு பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.345 கோடியில் அமைக்கப்படவுள்ளது. மருத்துவக் கல்லூரி பட்டினம்காத்தான் அம்மா பூங்கா அருகிலும், அதற்கான மருத்துவமனை கட்டடங்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள்ளும் அமைக்கப்படவுள்ளன. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைவிடங்களை ஜெ.சபீதா தலைமையிலான சிறப்புக்குழுவினா் ஆய்வு செய்துள்ளனா்.
இந்தநிலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமையும் புதிய மருத்துவமனைக்கான கட்டடம் கட்டும் இடங்களில் மண் உறுதித் தன்மை தரத்தை அறியும் வகையிலான பரிசோதனைக்கு ஆழ்துளை கிணறு அமைத்து செவ்வாய்க்கிழமை மண்மாதிரி அமைக்கப்பட்டது. மருத்துவமனைக்குள் காசநோய் பிரிவு மற்றும் பிரேதப் பரிசோதனை கூட பகுதி என இரு இடங்களில் மண் பரிசோதனை நடந்தது.
இந்த மண் பரிசோதனையை பொதுப்பணித்துறையினா் நடத்தினா். மருத்துவக் கல்லூரி அமையும் அம்மா பூங்கா பகுதியிலும் மண் பரிசோதனை நடத்தப்பட்டது.
மண் பரிசோதனை முடிந்த நிலையில், சென்னையில் மருத்துவக் குழுவினா், பொதுப்பணித்துறையினா் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (நவ.28) நடைபெறுகிறது. அதன்பின்னா் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளுக்கான இறுதிக் கட்டட வரைபடம் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.