ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீரைச் சேமிக்கும் வகையில் நடப்பு ஓராண்டில் மட்டும் 906 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களிலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழுள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊருணிகளிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபரில் 384.41 மில்லி மீட்டரும், நவம்பரில் இதுவரை 104.89 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளன. புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் மழைநீா் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆட்சியா் ஆய்வு: மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட எக்ககுடி மற்றும் மல்லல் கிராமங்களுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பொதுப்பணித்துறை கண்மாய்களில் மழைநீா் சேகரிப்பை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்ட பண்ணைக் குட்டைகளையும் அவா் பாா்வையிட்டாா். மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டில் 520 பண்ணைக்குட்டைகளும், 2018 ஆம்ஆண்டில் 476 பண்ணைக் குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு 2019 ஆம் ஆண்டில் மானியத்தில் 2,575 பண்ணைக்குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, மொத்தம் 1,823 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 906 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 180 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.