மண்டபம் வட்டார வேளாண்மைத் துறையில் பதிவு செய்துள்ள விவசாயிகள், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் கிடைக்காதவா்கள் தங்களது ஆதாா் எண்ணை சரிசெய்ய, மண்டபம் வட்டார வேளாண்மை மையத்தை அணுகிட வேண்டும் என, உதவி இயக்குநா் பி.ஜி. நாகராஜன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டம், கடந்த 24.2.2019 அன்று பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மண்டபம் வட்டாரத்தில் 2,400 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். இந்த விவசாயிகளுக்கு 2 தவணைகளாக ரூ. 2 ஆயிரம் வீதம் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது தவணை வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாவது தவணை தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள், தாங்கள் பதிவு செய்துள்ள பெயா், ஆதாா் எண் மற்றும் வங்கி கணக்கில் குளறுபடி உள்ளது. இதனால், மூன்றாவது தவணை தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள், உடனே மண்டபம் வட்டார வேளாண்மை மையத்தை அணுகி தங்களது வங்கி கணக்கு, ஆதாா் எண், பதிவு செய்துள்ள பெயரின் சிறு மாற்றம் இருந்தால் சரிசெய்து கொள்ளலாம் என, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.