கமுதி அருகே அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டடத்திற்கு அருகே சேதமடைந்து, இடிந்து விழும் நிலையிலுள்ள சமையலறை கட்டடத்தால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கமுதி அருகே அபிராமத்தில் காவல் நிலையம் எதிரே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 38 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் துவக்கப்பள்ளி வகுப்பறைக்கு அருகே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் சமையலறை கட்டடம் உள்ளது.
இந்த கட்டடத்தின் மேற்கூரை, சுவர்கள் இடிந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இதனால், சமையலறை, வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் வகுப்பறை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள சமையலறை கட்டடத்தால் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்களின் நலன் கருதி பயன்படாத, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.