வெளிநாட்டில் இறந்த மகனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு அவரது தாய் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ளது வாகைக்குளம். இந்த ஊரைச் சேர்ந்த சோனை முத்து மனைவி சரஸ்வதி (65). இவருக்கு 2 மகன்கள், மகள் உள்ளனர். சோனை முத்து இறந்த நிலையில், ஒரு மகன், மகளுக்கு திருமணமாகிவிட்டது. திருமணமாகாத மூத்த மகன் மணிகண்டன் (42) குவைத்திற்கு சென்று தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி குவைத்தில் மணிகண்டன் தங்கியிருந்த அறையில் உயிரிழந்துவிட்டதாக அவருடன் தங்கியவர்கள் சரஸ்வதிக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்ற விவரத்தை அவர்கள் கூறவில்லை. மேலும், மணிகண்டன் இறப்பு குறித்து அவர் பணிபுரிந்த தனியார் நிறுவனத்திடமிருந்தும் தகவல் இல்லையாம்.
இதையடுத்து, சரஸ்வதி தனது மகன் இறப்பு குறித்து விசாரணை நடத்தவும், அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், தனக்கு இழப்பீடு வழங்கவும் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்களுடன் மனு அளித்தார்.
இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், வறுமை காரணமாகவே மகனை வெளிநாட்டுக்கு அனுப்பினேன். ஆனால், திடீரென மகன் இறந்ததாக தகவல் வந்துள்ளது. மகனின் சடலத்தை கொண்டு வருவதற்கான வழி தெரியவில்லை.
அதற்கான போதிய பணமும் இல்லை. ஆகவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உதவவேண்டும் என்றார்.