ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீனவர்கள் கடலில் பேரிடர் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதலுதவி பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் மீனவ கிராமத்தில் கடல் ஓசை வானொலி நிர்வாகம் சார்பில் மீனவர்களுக்கு பயனளிக்கும் வகையில் முதலுதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது மீனவர்களுக்கு, கடலில் திடீரென ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது உயிரை பாதுகாப்பது குறித்த முதுலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை மையம் ஐ.சி.டி.எம் சார்பாக ஜாஸ்மின், சத்யபிரியா, பாம்பன் சிக்கந்தர் ஆகியோர் மீனவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இந்தியன் ரெட் கிராஸ் முதலுதவி பயிற்சியாளர் அலெக்ஸ் மீனவர்களுக்கு பயிற்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராக்லண்ட் மதுரம், கடலோரக் காவல்படை போலீஸ் சார்பு-ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி, கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.