மண்டபத்தை சேர்ந்த மூன்று கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் சிறு தானிய விதைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ராமன்வலசை, மூப்பன்வலசை, எம்.பி.கே.வலசை, வடக்குவலசை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு மாற்றுப் பயிராக சிறுதானியங்கள் சாகுபடி செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை உச்சிப்புளியில் நடைபெற்றது.
இம்முகாமுக்கு உச்சிப்புளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஜி.நாகராஜன் தலைமை வகித்து பேசியது: மண்டபம் வட்டாரத்தில் 2,000 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நடப்பாண்டில் சுமார் 400 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிருக்கு பதிலாக சிறு தானியங்களான திணை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, பனிவரகு, ஆகியவற்றை சாகுபடி செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சிறுதானியங்கள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலை எதிர்த்து வளரக்கூடியது. அதிக நார்சத்துடையது. எனவே விவசாயிகள் தாங்கள் நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் குறைந்த பட்சம் 1 ஏக்கரில் மாற்றுப்பயிராக சிறுதானியங்கள் சாகுபடி செய்ய வேண்டும் என்றார்.
இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு 1 ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு தேவையான ஜி.பி.யு-48 சான்று ரக கேழ்வரகு விதைகளை வழங்கினார். தரிசு நிலங்களில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், இம்மாத இறுதிக்குள் நேரடி நெல் விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.600 மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையம், உச்சிப்புளியை
அணுகி பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டார். இதில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.