ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் நீண்ட நாள்களாக நீர்மூழ்கி மோட்டார் பழுதானதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சிக்குட்பட்டது என்.வளையனேந்தல் கிராமம். இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் முன்பு ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 8 மாதங்களாக ஆழ்துளைக்கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் மூழ்கி மோட்டார் பழுதாகி விட்டது.
இதனை சீரமைப்பதற்காக எடுத்துச்சென்ற பின்பு மீண்டும் பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் 2 கி.மீ. தூரம் வரை சென்று வைகை ஆற்று தடுப்பணை பகுதியில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராமமக்கள் கூறுகின்றனர்.
இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.