திருப்பாலைக்குடி மத்திய கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முடியாததால் அப்படியே விட்டுச் சென்றனர். இதனால் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள், பணம் தப்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது திருப்பாலைக்குடி கிராமம். இங்கு மத்திய கூட்டுறவு வங்கிக்கிளை மற்றும் தபால் அலுவலகம் அருகருகே அமைந்துள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் வங்கி பூட்டை உடைத்து உடைத்துப் புகுந்துள்ளனர். வங்கி பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அதை திறக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதே போல் அருகில் உள்ள தபால் அலுவலகத்திலும் திருட முயற்சி நடந்துள்ளது. புதன்கிழமை காலை வழக்கம்போல் வங்கி ஊழியர்கள் வங்கியை திறக்க வந்தபோது கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக திருப்பாலைக்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையிலான காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் தடயங்களை சேகரித்தனர். பெட்டகத்தை உடைக்க முடியாததால் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பல லட்சம் ரொக்க பணம் தப்பியது தெரியவந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் சோதனையிட்டபோது அதில் கைலியால் முகத்தை மூடிக்கொண்டு ஒருவர் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.