ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி முதலிடம் பிடிக்கும் விவசாய பாசன சங்கத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் வெண்ணத்தூர், சம்பை ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். வெண்ணத்தூர் கண்மாயில் ரூ.99 லட்சம் மதிப்பிலும், சம்பை கண்மாயில் ரூ.39 லட்சம் மதிப்பிலும் புனரமைப்புப் பணிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வினைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கீழ்வைகை வடிநிலக் கோட்டம் ( பரமக்குடி) கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும், குண்டாறு வடிநில கோட்டம் (மதுரை) கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. குடிமராமத்து பணியினை சிறப்பாக செயல்படுத்தி ஆயக்கட்டுதாரர் நலச் சங்கத்தினை ஊக்குவித்திடும் வகையில் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ஆம் மற்றும் 3-ஆம் பரிசாக தலா ரூ.5 லட்சமும் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜி.சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் பிரபு, பி.ஆனந்த்பாபுஜி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.