நல்லாசிரியர் விருதுபெற்ற பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியருக்கு, பள்ளி கல்விக் குழு சார்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இப்பள்ளியின் உதவித் தலைமையாசிரியரான எம். புரோஸ்கான், ஆசிரியர் பணியில் சிறந்த சேவையாற்றியமைக்காக தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கியுள்ளது. விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு விழா, பள்ளியின் தாளாளர் சாதிக்பாஷா தலைமையில் நடைபெற்றது.
இதில், கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் முகம்மது யாக்கூப், செயலர் கமருல் ஜமாலுதீன், பொருளாளர் அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் என். சதர்ன் பிரபாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுபெற்ற ஆசிரியரை கெளரவித்து சிறப்புரையாற்றினார்.
இளையான்குடி ஹமீதியா மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ஷேக் தாவூத், பரமக்குடி டான் பாஸ்கோ மெட்ரிக். பள்ளித் தாளாளர் எலிசபெத் மேரி ராணி, இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரிப் பேராசிரியர் செய்யதுஅபுதாஹிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விருதுபெற்ற நல்லாசிரியர் எம். புரோஸ்கான் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர் எம். அஜ்மல்கான் வரவேற்றார். பள்ளி உதவித் தலைமையாசிரியர் காஜாமுகைதீன் நன்றி கூறினார்.