ராமேசுவரம், செப்.26: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கடந்த மாதம் உண்டியல் வருவாய் ரூ.73.24 லட்சம் கிடைத்துள்ளதாக இணை ஆணையா் எஸ்.கல்யாணி தகவல் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய உண்டியல் எண்ணும் பணி புதன்கிழமை காலையில் இணை ஆணையா் எஸ்.கல்யாணி முன்னிலையில் தொடங்கியது. இரவு வரை எண்ணும் பணி நடைபெற்ற நிலையில் 73 லட்சத்து 24 ஆயிரத்து 501 ரூபாய், 34.200 கிராம் தங்கம், 1.495 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது.
உண்டியல் எண்ணும் பணியில் பரமக்குடி உதவி இணை ஆணையா் சிவலிங்கம், மேலாளா் முருகேசன், கண்காணிப்பாளா்கள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், ஆய்வா் தங்கையா, உதவி கோட்ட பொறியாளா் மயில்வாகனன், கலைச்செல்வன், கமலநாதன் மற்றும் ஆன்மிகப் பணி தொண்டா்கள் என 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.