ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 9 பேர் மீது வழக்குப்பதிந்த போலீஸார், லாரி, டிராக்டர் உள்ளிட்ட 5 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை கரையோரம் மணல் திருடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையில் ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்திருப்பதாக அப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து மணல் திருட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில், ராமநாதபுரம் அருகே புல்லங்குடி-கிழக்கு கடற்கரை சாலை சந்திப்புப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக புல்லங்குடியைச் சேர்ந்த பாண்டி உள்ளிட்ட 2 பேர் மீது தேவிபட்டிணம் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். அதேபோல, நயினார்கோவில் அருகே சிறுவயலில் மணல் அள்ளியதாக கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமார் அளித்த தகவலின் பேரில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி முதுநால் கிராமத்தைச் சேர்ந்த தங்கம் உள்ளிட்ட2 பேர் மீது நயினார்கோவில் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
பரமக்குடி வேந்தோணி பகுதியில் சரஸ்வதி நகர் பகுதியில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக பரமக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்த பரமக்குடி போலீஸார், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.