ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.12 லட்சம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரைக் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் குந்துகால் பகுதியில் கஞ்சா கடத்த இருப்பதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் வந்த இருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அந்த பைகளை சோதனையிட்ட போது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சா 8 பார்சல்களில் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராமேசுவரத்தை சேர்ந்த கலையரசன் (28), ரவிபிரசாத் (27) என்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக மதுரையில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், மதுரையில் உள்ள கஞ்சா வியாபாரியை பிடிக்க விரைந்துள்ளனர்.