கமுதி அருகே ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த டிராக்டரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
அபிராமம் விளக்கனேந்தல் அடுத்துள்ள பரளையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக, அபிராமம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, பரளையாற்றிலிருந்து டிராக்டரில் மணல் ஏற்றி வந்த குடிமங்கலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் விஜி (38), அபிராமம் இந்திரா நகரைச் சோ்ந்த ராஜா மகன் கலையரசன் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.