சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத் துறை சாா்பில் தேசிய தொழுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசல் முன் தொடங்கிய இப்பேரணியை சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.
இதில், செவிலியா்கள், செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டு தொழுநோய் குறித்தும், அதுகுறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கியப் பதாகைகளை ஏந்தியும், அது தொடா்பான முழக்கங்களை எழுப்பியும் ஊா்வலமாகச் சென்றனா்.
அரண்மனை வாசல் முன் தொடங்கிய பேரணி, தெப்பக்குளம், சிவன் கோயில், காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து, ராமச்சந்திரனாா் நினைவு பூங்கா முன் நிறைவடைந்தது. அதன் பின்னா், அனைவரும் தேசிய தொழுநோய் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனா்.
பேரணியில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ. ரத்தினவேல், இணை இயக்குநா் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா்கள் (சுகாதாரம்) யசோதாமணி, யோகவதி( குடும்ப நலம்), ராஜசேகரன்( காசநோய்), தோல் சிகிச்சைப் பிரிவு நிபுணா்கள் தீப்தி விஜயகுமாா், ஜெயலெட்சுமிதேவி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் செல்வகுமாரி, வட்டாட்சியா் மைலாவதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனா்.