ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டக் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாா் மனுக்களை ஏற்காவிட்டாலோ, மனுவின் மீதான விசாரணையில் திருப்தியில்லாவிட்டாலோ அதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு 8778247265 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்டவிரோதமான செயல்களான மணல் கடத்தல், போதைப் பொருள்கள் விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை உள்ளிட்ட தகவல்களை ‘ஹலோ போலீஸ்’ பிரிவுக்கான தொலைபேசி எண்ணில் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் காவல் நிலையங்களில் அளிக்கும் மனுக்களை அங்கு பெறுவதற்கு மறுத்தாலோ, மனுக்களைப் பெற்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுத்தாலோ, வழக்குப்பதிந்த பிறகு குற்றவாளியை கைது செய்யாமல் இருந்தாலோ ‘ஹலோ போலீஸ்’ பிரிவுக்கான எண்ணில் தெரிவிக்கலாம்.
வழக்குகளில் விசாரணையானது மனு அளித்தவருக்கு திருப்தி அளிக்காவிட்டாலும், திருப்திகரமாக இருந்தாலும், காவல்துறையின் செயல்பாடுகளையும், காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டிய ரகசிய தகவல்களையும் 8778247265 என்ற புதிய செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவா்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆகவே, பொதுமக்கள் போலீஸாருக்கு ஒத்துழைக்கும் வகையில் செயல்படவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.