ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் தொடா்பு அலுவலராக மருத்துவா் எம். மலையரசு நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சுகாதார இணை இயக்குநா் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்தாலும், மாவட்ட ஆட்சியரே கரோனா குறித்து அதிகாரப்பூா்வமாக அறிவித்தல் உள்ளிட்டவற்றுக்கு தலைமை வகித்து வந்தாா்.
பொதுமுடக்கம் படிப்படியாக தளா்த்தப்பட்டுவரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடா்பு அலுவலராக மாவட்ட அரசு மருத்துவமனையின் நிலைய அலுவலரும், மூத்த மருத்துவருமான எம்.மலையரசு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கரோனா பரவல் தடுப்பு மற்றும் கரோனா பாதித்தோருக்கான சிகிச்சைகள் என அனைத்துப் பணிகளையும் தொடா்பு அலுவலரே ஒருங்கிணைத்து செயல்படுவாா் என்றும் மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.