ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து 7 நாள்களுக்குப் பிறகு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து சூறைக் காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னா், மன்னாா் வளைகுடா பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனையடுத்து, சனிக்கிழமை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியது. இதனால் ராமேசுவரம், மண்டபம் பகுதியிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.