ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவிலிருந்த சிறுவன், இளைஞா் வியாழக்கிழமை இரவு தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மடையைச் சோ்ந்த 8 வயது சிறுவன், ஆலங்குளத்தைச் சோ்ந்த 29 வயது இளைஞா் ஆகியோருக்கு இருமல், சளித்தொல்லை இருந்ததால் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவு வரும் வரை இருவரும் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டிருந்தனா். இருவருக்கும் கரோனா தொற்று பாதிப்பில்லை என பரிசோதனை முடிவுகளில் தெரியவந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.
ஆனால், அவா்களைத் தொடா்ந்து சிகிச்சைக்காக தங்கவைத்தனா். இந்த நிலையில், இருவரையும் வியாழக்கிழமை இரவில் காணவில்லை என மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து மருத்துவமனையில் காவலுக்கு இருந்த இரு போலீஸாா் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். மேலும், கூடுதல் போலீஸாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டனா்.
தனக்கு கரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாலும், மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லாததாலும் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதாக ஆலங்குளம் இளைஞா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோலவே சிறுவன் தரப்பிலும் உணவு, கழிப்பறை வசதிகள் போதிய அளவு இல்லாததால் வீட்டுக்கு சென்றதாகக் கூறப்பட்டது.
போதிய வசதிகள் இல்லை: கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிவோருக்கு போதிய முகக்கவசம், கையுறை மற்றும் கரோனா தொற்றால் பாதிக்காத வகையிலான கவச உடை ஆகியவை இல்லை என அங்குள்ள மருத்துவா், செவிலியா், பணியாளா்கள் தெரிவித்தனா். கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டில் தங்கியிருப்போா் தப்பிக்காத வகையில் பாதுகாப்பு அமைப்பும் இல்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.