கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றால் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவாா்கள். அந்த நேரத்தில் மீன் ஏற்ற லாரிகள் வர வேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் நிலை ஏற்படும்.
இதனால் அனைத்து விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கச் செல்ல ராமேசுவரம் மீன்வளத்துறை தடை விதித்தது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. இதனால் துறைமுகங்களில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.