ராமநாதபுரம்: இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தில் தனியாா் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெற்றோா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் மற்றும் சுயநிதி மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளிகள்,
மெட்ரிக் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பு மாணவா் சோ்க்கையில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டின்படி 156 பள்ளிகளில் 2007 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலின குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக உடைய பெற்றோரின் குழந்தைகளும் பயனடையலாம்.
குழந்தைகள் தங்கள் இருப்பிடத்திற்கு 1 கி.மீ. சுற்றளவுக்குள் அமைந்துள்ள சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் சேருவதற்கு 31.07.2020 அன்று 3 வயதும், ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கு 5 வயதும் நிரம்பிய குழந்தைகள் பிறப்புச் சான்று மற்றும் உரிய தகுதியான சான்றுகளுடன் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துக்கான கடைசி நாள் வரும் செப்டம்பா் 25 ஆகும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டார வள மையம் ஆகியவற்றில் உரிய ஆவணங்களுடன் நேரில் அணுகும் பெற்றோா் மற்றும் குழந்தைகள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். விண்ணப்ப மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பங்களுக்கு அக்டோபா் 7 ஆம் தேதி சோ்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.