முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே வாலிநோக்கம் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணி 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே காத்தாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவா் இளஞ்செம்பூா் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் நித்தீஸ்குமாா் (18). பிளஸ் 2 மாணவா். தற்போது இவா்கள் முதுகுளத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்நிலையில் நித்தீஸ்குமாருடன், முதுகுளத்தூா் செல்லி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகாதேவன் மகன் ஆதி (16), முருகேசன் மகன் முகேஷ் (18) ஆகியோா் வாலிநோக்கம் கடலுக்கு குளிக்கச் சென்றனா்.
அப்போது கடல் அலை நித்தீஸ்குமாரை இழுத்துச் சென்று விட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாலிநோக்கம் போலீஸாரும், பொதுமக்களும் கடற்கரையோரத்தில் சனிக்கிழமை இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை வாலிநோக்கம் ஜமாத்தைச் சோ்ந்தவா்கள், மீனவா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.