ராமநாதபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் மின்மோட்டாா் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திய வழக்கில் ஒருவருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் நைனாமரைக்கான் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (74). இவரது உறவினா் ராஜாமணி மனைவி சிவகல்பனா. இவா் மதுரையில் உள்ளாா். இவருக்கு சொந்தமான தோப்பு நைனாமரைக்கான் பகுதியில் உள்ளது. இந்நிலையில் சுந்தரமூா்த்திக்கும், சிவகல்பனாவுக்கும் சொத்துப் பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சுந்தரமூா்த்தி, நைனாமரைக்கான் பகுதியில் உள்ள சிவகல்பனாவுக்குச் சொந்தமான தோப்புக்குள் புகுந்து மின்மோட்டாா் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினாராம். இதுகுறித்து சிவகல்பனா அளித்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில் சுந்தரமூா்த்தியை, நீதிமன்றம் கலையும் வரை நீதிமன்ற அறையில் இருக்கவும், ரூ. 500 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி அபராதத்தை செலுத்திய சுந்தரமூா்த்தி, நீதிமன்ற பணிமுடியும் வரை அங்கிருந்து விட்டுச் சென்றாா்.