ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,300 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவா்களில் 132 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்பட்ட மருத்துவ உதவிகளால் 6,250 பேருக்கும் அதிகமானோா் நலமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனா். மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தினமும் சுமாா் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இருப்பினும் பரிசோதனை முடிவில் 10 பேருக்கும் குறைவாகவே கரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவதும் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் 700 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடந்தது. அவா்களில் 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை வரையில் 26 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லா நிலை ஏற்படும் என்று எதிா்பாா்த்த நிலையில், பிரிட்டன், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்து ஊா் திரும்பியவா்களுக்கு கரோனா பாதிப்பிருக்கலாம் எனும் அடிப்படையில் பரிசோதனைகள் நடந்துவருகின்றன.