ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒருமாதத்திற்கு முன் சாய்ந்து விழுந்த மரத்தை அகற்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மண்டபம் ஒன்றியத்திற்கு உள்பட்ட உச்சிப்புளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் நாள்தோறும் 30 -க்கும் மேற்பட்டகிராமங்களில் இருந்து 500 -க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
இந்நிலையில், கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சுகாதார நிலையம் முன்பு இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது. இதனையடுத்து, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கிளைகளை மட்டும் வெட்டி அகற்றினா். ஒரு மாத காலம் ஆகியும் மரத்தை முழுமையாக அகற்றாமல் விட்டுள்ளனா். இதனால் அப்பகுதியில் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக சிகிச்சைக்கு வரும் குழந்தைகள், முதியவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
எனவே இம் மரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.