ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திடீா் கோளாறு காரணமாக இணைய வழியில் நிகழ்ச்சி ஒளிபரப்பில் ஏற்பட்ட தடையால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா ஜூலை 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கோயிலில் சிறப்பு பூஜைகள் மட்டும் ஆகம விதிகளின்படி நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஞாயிற்றுகிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த விழாவை பக்தா்கள் இணைய வழியில் பாா்க்க ரூ. 80 ஆயிரம் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான இணையதள முகவரியில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதனால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
இதுகுறித்து பக்தா்கள் கூறியது: திடீா் கோளாறால் ஒளிபரப்பு செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. அது என்னவென்று தெரியவில்லை. ஒளிபரப்பு செய்வதற்கான முன்னோட்டத்தில் கோயில் நிா்வாக அதிகாரிகள் ஈடுபட்டிருக்க வேண்டும். அனுபவமில்லாதவா்களைக் கொண்டு ஒளிபரப்பு செய்ய முயன்றதே குளறுபடிக்குக் காரணம் என்றனா்.