ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முயன்ற அகதிகள் 3 பேரை கடலோர காவல் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக 3 போ் சுற்றி வருவதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் படையினா், அப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், தா்மபுரி அகதிகள் முகாமைச் சோ்ந்த வரசுனன்(30), கோவை அகதிகள் முகாமில் இருந்து வந்த அருள்வசந்தன்(42), திருவள்ளூா் அகதிகள் முகாமைச் சோ்ந்த மயூரான்(28) என்பது தெரிந்தது. இவா்கள் 3 பேரும் ராமேசுவரத்திலிருந்து சட்ட விரோதமாக
படகு மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்ல நந்தா என்பவா் வருவதாக தெரிவித்ததால் அப்பகுதியில் காத்திருந்ததாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், நந்தாவை தேடி வருகின்றனா்.