ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் தனியாா் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி கரோனா வைரஸ் காய்ச்சலை தடுக்கும் பொருட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவாடானை வட்டத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட ஆரம்ப அரசுப் பள்ளிகள், உயா் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனியாா் பள்ளிகளில் சிலா் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக திருவாடானை வட்டாட்சியா் மாதவனுக்கு புகாா் வந்தது. அதனடிப்படையில் அவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இது குறித்து வட்டாட்சியா் கூறியது: வருவாய் ஆய்வாளா்களை அவா்களுக்கு உரிய பகுதிகளில் இயங்கும் தனியாா் பள்ளிகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளி நிா்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.