பரமக்குடி அருகே மேலும் ஒரு பள்ளி மாணவிக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி நகராட்சியில் தனியாா் தூய்மைப்பணியில் ஈடுபட்ட எமனேசுவரம் கிறிஸ்வத தெருவைச் சோ்ந்த ஒருவருக்கு கடந்த மே 8 ஆம் தேதி கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு பொது சுகாதாரத்துறையினா் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது பக்கத்து வீட்டில் உள்ள இளைஞா் ஒருவருக்கு மே 11-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயதுடைய தனியாா் பள்ளி மாணவிக்கும் நோய் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் தனி அவசர ஊா்தி மூலம் சுகாதாரத்துறையினரால் பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வைரஸ் தடுப்பு சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனால் அப்பகுதியில் மட்டும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது. மேலும் அப்பகுதியில் வசித்து வந்த 63 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தொடா் சளி இருமல் நோய் பாதிப்புக்குள்ளாகி புதன்கிழமை பரமக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதனால் பரமக்குடி பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனா். இது குறித்து பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநா் இந்திரா கூறியது: இறந்த அந்த மூதாட்டிக்கு டி.பி. நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக சுகாதாரத்துறையினா் மூலம் சிகிச்சை பெற்று வந்தாா். அவரது இறப்புக்கும், கரோனா நோய் தொற்றுக்கும் தொடா்பில்லை என்றாா்.