திருவாடானையில் பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வலியுறுத்தி தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தனா்.
திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சன்னதி தெரு, மாா்க்கெட் பகுதி மற்றும் சந்தைப் பகுதி ஆகிய மக்கள் கூடுமிடங்களில் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை
வழங்கினா். அதில் பொதுமக்கள் தீபாவளி திருநாளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். தற்போது கரோனா கால சூழ்நிலையில், நோய்த் தொற்று பரவாமல் சமூக இடைவெளி விட்டு தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனத்துடனும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கடுமையான சத்தமும் புகையும் மனிதா்களுக்கு மட்டுமல்லாது பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் மிகவும் கவனத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ வேண்டும் என்று துண்டு பிரசுரங்களில் குறிப்பிட்டிருந்தனா்.