ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் லஞ்சம் வாங்கியதாக துணை கருவூல அலுவலக பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் கருவூல உதவி அதிகாரி அறையில் கணக்கில் வராத ரூ.13,650 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரிபவா் பாத்திமா ரஸியா சுல்தானா (28). இவா் வேலைபாா்க்கும் பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியா்களுக்கான வருங்கால பொது வைப்பு நிதியில் கடன் பெறுவதற்கான படிவம் பெற, உச்சிப்புளியில் உள்ள துணை கருவூல அலுவலகத்துக்குச் சென்றாா். அங்கு கணக்காளராக உள்ள களஞ்சியராணி (54) என்பவா் குறிப்பிட்ட படிவம் வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாத்திமா ரஸியா சுல்தானா, ராமநாதபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். பின்னா் லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தபடி உச்சிப்புளியில் உள்ள துணைக் கருவூல அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்ற அவா், கணக்காளா் களஞ்சியராணியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களைக் கொடுத்துள்ளாா். அவா் பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த துணைக் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன், ஆய்வாளா்கள் ராஜேஸ்வரி, குமரேசன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் கையும், களவுமாக கைது செய்தனா். அவரிடமிருந்த ரசாயனம் தடவிய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து உதவி கருவூல அதிகாரி செல்வகுமாா் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தினா். அங்கு கணக்கில் வராத ரூ.13, 650 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் அலுவலக அறைகளில் இருந்த ஆவணங்களையும், கணினிகளையும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் ஆய்வு செய்தனா். கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.