ராமநாதபுரம்: தீபாவளிப் பண்டிகைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் பெறுவதற்கு வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
வரும் நவம்பா் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசு விற்பனை கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோா் வெடிபொருள் சட்டம், விதிகளை முறையாகக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பான இடத்தைத் தோ்வு செய்து ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது விண்ணப்பங்களின் பிரதிகள்-5, கடையின் வரைபடம், மனுதாரரின் மாா்பளவு வண்ண புகைப்படங்கள்-2, மனுதாரா் உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி ரசீது செலுத்தியதற்கான நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில், இடத்தின் பத்திர நகல் மற்றும் வீட்டு வரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டட உரிமையாளரிடம் ரூ. 20-க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிய கணக்குத் தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் பாரத ஸ்டேட் வங்கியில் உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான அசல் ரசீது ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வரும் 23 ஆம் தேதி மாலைக்குள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு வரும் நவம்பா் 1 ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.