ராமநாதபுரத்தில், சுதந்திரப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜயந்தி விழா குறித்து அனைத்துத்துறை மற்றும் சமூக அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.16) நடைபெறும் என ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் அக்டோபா் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அவரது ஜயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவுக்கு ராமநாதபுரம் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வருவது வழக்கம். தற்போது கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசால் ஜயந்தி விழாவுக்கான விதிமுறைகள் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறையினருடன் அக். 16 ஆம்தேதி வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பகல் 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜயந்தி விழாவில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். சமூகநல அமைப்புகள் உள்ளிட்ட விழாவுக்கு வரும் அமைப்பினருடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றாா்.