ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பணியாளா்கள், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கருப்பு வில்லை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவா்கள், சட்டையில் கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலக வளாகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் ஊழியா்கள் கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபட்டனா். அவா்கள் கூறுகையில் புதன்கிழமை (ஆக.4) வரை வில்லை அணியும் போராட்டம் நடைபெறும் என்றனா்.