மதுரை பள்ளி மாணவா்கள் ‘இணையத்திலிருந்து இயற்கையில் இணைவோம்’ என்ற விழிப்புணா்வு சைக்கிள் பயணமாக வியாழக்கிழமை ராமேசுவரம் வந்தடைந்தனா்.
மதுரையில் உள்ள தனியாா் வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா்கள் 19 பேரும், மாணவியா் 6 பேரும் என மொத்தம் 25 போ் 8 ஆசிரியா்களுடன் விழிப்புணா்வு சைக்கிள் பயணமாக ராமேசுவரம் வந்தனா். இவா்கள், மதுரையிலிருந்து புதன்கிழமை காலை புறப்பட்டு, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேக்கரும்பில் உள்ள ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தேசிய நினைவிடம் வரை சைக்கிளில் 36 மணி நேரம் பயணம் செய்து, வியாழக்கிழமை வந்தடைந்தனா்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இணையவழி கல்வி மூலமாக வீட்டிலிருந்தே பயின்று வந்த மாணவா்களை, இயற்கைச் சூழலுக்கு மாற்றி அவா்களது மனதையும், உடலையும் புத்துணா்ச்சி அடையச் செய்வதே இப்பயணத்தின் நோக்கமாகும். மேலும், இதன்மூலம் மன அழுத்தம் குறைந்து கல்வியில் கவனம் செலுத்த தூண்டுதலாய் இருக்கும் எனவும் தெரிவித்தனா்.