ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 108 அவசர ஆம்புலன்ஸ் அழைப்புகள் மூலம் 30,227 போ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 25 அவசர கால 108 ஆம்புலன்ஸ்கள் நவீன வசதிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 30,227 போ் பயனடைந்துள்ளனா்.
மேலும் மாவட்டத்தில் 3 செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்களும், பச்சிளம் குழந்தைகளுக்காக இரண்டு சிறப்பு செயற்கை சுவாச கருவிகளுடன் குழந்தைகள் ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. இதர அவசர சேவைக்காக 20 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர 24 மணி நேரமும் மருத்துவ தகவல் , மனநல ஆலோசனைகளுக்கு 104 என்ற இலவச அழைப்பையும் பயன்படுத்தலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.