பரமக்குடி நகராட்சிப் பகுதியில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அகற்றப்படாததால் தொற்றுப் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இங்குள்ள முக்கிய தெருக்களான சின்னக்கடைத் தெரு, பெரியகடை வீதி, வைசியா் வீதி, காந்திஜி சாலை, அங்காளம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள் தடுப்புகள் ஏற்படுத்தி அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் சேகரித்து வைத்திருந்த குப்பைகளை தெருக்களில் கொட்டி குவித்து வைத்துள்ளனா். இவற்றை அள்ளிச் செல்லும் வாகனங்கள் அத்தெருக்களில் வராததால் சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.
இதனால் துா்நாற்றம் வீசுவதுடன், குப்பைக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் எற்பட்டுள்ளது. எனவே அடைக்கப்பட்டுள்ள தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.