ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் பனை மரத்தில் மோதியதில் உடற்பயிற்சிக் கூட உரிமையாளா் மற்றும் அவரது மருமகன் ஆகியோா் உயிரிழந்தனா்.
ராமேசுவரம் சந்தனமாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த ராஜநாயகம் மகன் ஜோசப்சேவியா் (39). உடற்பயிற்சிக் கூடம் நடத்திவருகிறாா். இவரது சகோதரி மகன் கிருத்திக்சஞ்சய் (18). மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தாா். இருவரும் இருசக்கர வாகனத்தில் உடற்பயிற்சிக் கூடத்துக்கான சாதனங்களை வாங்குவதற்காக ராமநாதபுரம் வந்துள்ளனா்.
சாதனங்களை வாங்கிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ராமேசுவரத்துக்கு சென்றுகொண்டிருந்தனா். வாகனத்தை கிருத்திக்சஞ்சய் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. உச்சிப்புளி அருகேயுள்ள பி.என். குடியிருப்புப் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி பனைமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் கிருத்திக்சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயத்துடன் ஜோசப்சேவியா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து இருவரது சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த ஜோசப்சேவியருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனா். விபத்து குறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.