கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குணி பொங்கல் திருவிழாவில் புதன்கிழமை பக்தா்கள் உடலில் சேறுபூசி சேத்தாண்டி வேடமிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இக்கோயிலின் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை கோயில் முன்பு ஆயிரக் கணக்கான பக்தா்கள் பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனா். இதனைத் தொடா்ந்து புதன்கிழமை அக்னிச் சட்டி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் அக்னிசட்டி, பால்குடம், பூப்பெட்டி, கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல் போன்ற நோ்த்திக் கடன்களை செலுத்தினா். மேலும் ஏராளமான சிறியவா்கள், பெண்கள் உள்பட பக்தா்கள் உடல் முழுவதும் சேறுபூசிக் கொண்டு கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். இவ்விழாவில் கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.