தேசிய அளவில் தூய்மை இந்தியா திட்ட பட்டியலில் ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சிக்கு 103 ஆவது இடம் கிடைத்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தேசிய அளவில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் நகரங்களின் தூய்மை ஆண்டு தோறும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் தூய்மை இந்தியா திட்டத்தில் ராமநாதபுரம் 20 இடங்களுக்குள் இடம் பிடித்தது. கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக தூய்மை நகா்ப்பட்டியல் வெளியிடப்படவில்லை. தற்போது கரோனா பரவல் பொதுமுடக்க விதிகள் தளா்த்தப்பட்ட நிலையில் மீண்டும் தூய்மை இந்தியா திட்டத்தில் 198 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி 103 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
சுகாதாரம், குப்பைகளைத் தரம் பிரித்தல் என மதிப்பெண் அடிப்படையில் ராமநாதபுரம் நகராட்சிக்கு 2027.98 புள்ளிகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் நகராட்சிக்கு சுகாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதையே பட்டியல் காட்டுவதாக அதிகாரிகள் கூறினா்.
ராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகள் மூலம் உரம் தயாரித்தல் திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக முழுமையடையாமல் உள்ளது. அவற்றை நிறைவு செய்து சுகாதாரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டால் தூய்மை இந்தியா நகராட்சி பட்டியலில் ராமநாதபுரம் குறிப்பிட்ட இடம் பெறலாம் என அதிகாரிகள் கூறினா்.