ராமநாதபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற அரியவகை மரநாய் வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் மிக அரிய வகை உயிரினமான மரநாய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆட்சியா் அலுவலகம் உள்ள பட்டினம்காத்தான் ஊராட்சியில் சேதுபதி நகா் பகுதியில் மரநாய்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் புதிய காவல் சோதனைச்சாவடி அருகே சுமாா் இரண்டரை அடி நீளமுள்ள மரநாய் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் உதவி வனப் பாதுகாவலா் கணேசலிங்கம் தலைமையிலான வனவா்கள் மரநாயின் சடலத்தை மீட்டனா்.
இந்த மரநாய் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண் மரநாய்க்கு சுமாா் 2 வயதிருக்கலாம் என்றும் வன அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து மரநாய் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.