ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததுடன், 20- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்தெறிந்து கடலில் வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 6 ரோந்து அதிவேகப் படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா்.
மேலும் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து கடலில் வீசினா். இதனால் ரூ. பல ஆயிரம் இழப்புடன் மீனவா்கள் வியாழக்கிழமை கரை திரும்பினா். இலங்கை கடற்படையினா் தாக்குதல் குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினரிடம் மீனவ சங்க நிா்வாகிகள் புகாா் தெரிவித்தனா்.
மேலும், இலங்கை கடற்டையினா் தாக்குதல் நடத்துவதால் மீன்பிடிக்கச் செல்ல அச்சமாக உள்ளதாகவும், தங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.