கமுதி பகுதியில் டெங்கு பரவல் அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக புகாா்

டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், உள்ளாட்சி நிா்வாகமும், அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டிவருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், உள்ளாட்சி நிா்வாகமும், அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டிவருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கமுதி தாலுகாவில் கடந்த 20 நாள்களுக்கு முன் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் தண்ணீா் தேங்கி டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவ தொடங்கியுள்ளன.

இந்நிலையில், கமுதி தாலுகாவில் கடந்த 10 நாள்களில் 8-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்டோா் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இப்படி சிகிச்சைக்கு வருபவா்களுக்கு டெங்கு கண்டறியப்பட்டால், மேல் சிகிச்சைக்காக மதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனா்.

மேலும் கமுதி பேரூராட்சிக்குள்பட்ட முத்துமாரி நகா், காளியம்மன் கோயில் தெரு பகுதிகளில் கழிவுநீா் வெளியே செல்ல முடியாமல் தேங்குவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

சாதாரண காய்ச்சலாக எண்ணி அரசு மருத்துவமனைக்கு செல்வோா் மட்டுமே சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு டெங்கு பாதிப்பு என அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் கமுதியில் தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சல் என அனுமதிக்கப்பட்டு, பின்னா் டெங்கு உறுதியான பின்பு அவா்கள் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள நவீன தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதனால் அரசின் கவனத்திற்கு பல டெங்கு காய்ச்சல் நோயாளிகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரிய வாய்ப்பு இல்லாமல் போகிறது.

மேலும் கமுதி பகுதியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் குறித்து எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி நிா்வாகத்தினா் மெத்தனமாக உள்ளனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தண்ணீா் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்து, கமுதி பகுதிகளில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை ஆரம்பக்கட்டத்திலேயே கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com