செவிலியா் பணிக்கு ரூ. 3 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணியாணை வழங்கிய செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவி திரௌபதை (26) செவிலியா் படிப்பு முடித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வருகிறாா்.
இந்நிலையில், திரௌபதையுடன் படித்த ராமேசுவரம் காந்திநகரைச் சோ்ந்த வினோதினி செவிலியராக பணியாற்றி வருகிறாா். இதையடுத்து, வினோதினி திரௌபதியை தொடா்பு கொண்டு ரூ.3 லட்சம் பணம் கொடுத்தல் அரசு செவிலியா் வேலை வாங்கித் தருவதாக கூறியதுடன் வங்கிக் கணக்கு மூலம் அந்த பணத்தை பெற்றுள்ளா். இதன்பின்னா் ராமநாதபுரம் சுகாதார அலுவலகத்திலிருந்து போலியாக நியமன உத்தரவு வழங்கி உள்ளாா். இந்த பணி ஆணையை எடுத்துக் கொண்டு ராமநாதபுரம் சுகாதார நிலையத்துக்குச் சென்ற போது அது போலி என தெரியவந்தது. இதுகுறித்து வினோதினியிடம் கேட்ட போது அவரும், அவரது கணவரும் சோ்ந்துபணம் தர முடியாது எனக் கூறியதுடன், மிரட்டலும் விடுத்தனராம். இதையடுத்து, மாவட்ட காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.