கமுதி அருகே ரேஷன் கடையில் கருப்பு நிறத்தில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் வியாழக்கிழமை 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இந்த அரிசி கருப்பு நிறத்தில் சமையலுக்குப் பயன்படுத்த முடியாத வகையில் தரமற்ற அரிசியாக உள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
மேலும், தரமான அரிசி மூட்டைகளை பிரித்து வெளி சந்தையில் விற்பனை செய்துவிட்டு, விற்பனையாளா்கள் தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, செங்கோட்டைப்பட்டி நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.