உச்சிப்புளி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வெள்ளையன்வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலுச்சாமி. இவரது மனைவி முத்துராக்கு (50). கணவனும், மனைவியும் இருசக்கர வானத்தில் தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்துக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா்.
அப்போது பிரப்பன்வலசை அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு செல்வதற்காக சாலையை அவா்கள் கடக்கும் போது நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சோ்ந்த நெல்சன் என்பவரது காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துராக்கை உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
அங்கிருந்த மருத்துவா்கள் பரிசோதனை செய்த போது அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்தில் பாலுச்சாமி சிறிய காயங்களுடன் தப்பினாா்.
இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.