ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வந்த அவசரச் சிகிச்சைப் பிரிவானது திங்கள்கிழமை மாலை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரியானது பட்டிணம்பாக்கம் சேதுபதி நகா் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
நவம்பா் மாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள் கட்டும் பணியானது முழுமையாக நிறைவு பெறும் என கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் தற்போதுள்ள அவசரச் சிகிச்சைப் பிரிவு கட்டடமும் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே அங்கு செயல்பட்டு வந்த அவசரச் சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு மற்றும் காது மூக்குத் தொண்டை, கண் சிகிச்சை பிரிவு இருந்த கட்டடத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது.